நடிகர் ஆர்யா மீது பெண் பண மோசடி புகார் விசாரணை நிலைகுறித்து விளக்கம் தர வேண்டும்: சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் தரப்பில்  சிபிசிஐடியிடம் புகார் அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா   70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பணத்தை திரும்ப கேட்டபோது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்ணும் நடிகையுமான சாயிஷாவின்  பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும், 6 மாதத்தில் விவாகரத்து பெற்று விட்ஜாவை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியுள்ளார் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை-3, இரண்டகம் என்ற மலையாள படங்கள் வெளியானால் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடும். சிபிசிஐடியிடம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, அரசு தரப்பு வக்கீல், புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று  கோரினார். இதை ஏற்ற நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: