10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் இன்று காலை  தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வந்தனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 10,906 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 13ம் தேதி நடைபெற்றது.

எழுத்து தேர்வுக்கான முடிவுகள் சீருடை பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சாரிபார்ப்பு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக உடல் தகுதி தேர்வு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது. இதைதொடர்ந்து உடல் தகுதி தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 20 இடங்களில் தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் இன்று காலை முதலே ஆர்வமாக அந்தந்த மையங்களுக்கு வந்தனர். சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள அனைத்து அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.

அதை தொடர்ந்து, உடல் தகுதி, உடல் அளவு தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் அனைவரது கொரோனா பரிசோதனை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. மேலும், செல்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் தேர்வு நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. சென்னையை பொறுத்தவரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. அதற்கான முழு ஏற்பாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: