எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி : ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி வெளியிட்ட அறிவிப்பு:கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனைக்கு  தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில்  நர்ஸ் 60 பேர், பார்மசிஸ்ட் 10 பேர், லேப் டெக்னீஷியன் 5 பேர், அனிஸ்திஸ்யா டெக்னீசியன் 10 பேர், இசிஜி டெக்னீஷியன் 10 பேர், மல்டி பர்பஸ் ஆஸ்பிட்டல் ஓர்க்கர் 70 பேர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன. மேலும், இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டாது. தகுதியுள்ள, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை, ‘இயக்குநர் மற்றும் பேராசிரியர், மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூர், சென்னை-8’ என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க வருகிற 3ம் தேதி கடைசி நாள்.  3ம் தேதிக்கு பிறகு கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: