தொழிலாளியை கொன்று பெட்ரோல் ஊற்றி எரிப்பு: கள்ளக்காதலி உட்பட 3 பேர் கைது

திருப்பூர்: பிரின்டிங் நிறுவன தொழிலாளியை அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (37). இவர் தனது மனைவி கீதா மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் வசித்து வந்தார். பிரின்டிங் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரமாக தனது கணவரை காணவில்லை என கீதா வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கல்லாங்காடு பாறைக்குழியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில், இறந்து கிடந்தது காணாமல் போன சந்தோஷ்குமார் என்பதும், அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கல்லாங்காடு அடுத்துள்ள திருக்குமரன் நகரை சேர்ந்த முருகேஸ்வரி (50), அவரது மகன் ஆரோக்கியதாஸ் (25), இவரது நண்பர் பாலசுப்ரமணியன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். சந்தோஷ்குமாருக்கும், முருகேஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த 17ம் தேதி முருகேஸ்வரி வீட்டிற்கு சென்ற சந்தோஷ்குமார் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேஸ்வரி, ஆரோக்கியதாஸ், பாலசுப்ரமணியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி சந்தோஷ்குமாரை கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை மறைக்க கல்லாங்காட்டில் உள்ள பாறைக்குழி பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து மண்ணை போட்டு மூடியது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: