மதுரை: மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கலைஞர் நூலகம் அமைய உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில், 2 லட்சம் சதுரடியில் ‘‘கலைஞர் நினைவு நூலகம்’’ அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் அறிவித்தார். இதற்காக அங்கு 6 பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தவிர்த்து புதிய இடத்தை தேர்வு செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து மதுரை சொக்கிகுளம், மேற்கு யூனியன் அலுவலகம் அருகே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கருக்கு மேல் உள்ள காலி இடத்தை தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.