சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக முன்னாள் எம்பி அப்துல் ரகுமான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் வக்பு வாரியத்திற்கான தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இந்த தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். இதற்கான வாக்காளர் பட்டியலை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது. தொடர்ந்து வக்பு வாரிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் சென்னை மண்ணடியில் உள்ள வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் வக்பு வாரியத்தின் தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணை தலைவரும், முன்னாள் எம்பியுமான எம்.அப்துல் ரகுமான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.