மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் 3வது வழக்கில் சிவசங்கர் பாபா கைதாகிறார்

* வற்புறுத்தியதால் மாணவிகளிடம் பேசி அழைத்து வந்தோம்

* 3 ஆசிரியைகள் சிபிசிஐடியில் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: சிவசங்கர் பாபா வற்புறுத்தியதால் தான் நாங்கள் மாணவிகளிடம் பேசி ரகசிய அறைக்கு அழைத்து வந்தோம் என விசாரணையின்போது 3 ஆசிரியைகள் சிபிசிஐடியில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அளித்த புகாரின்படி 3வது வழக்கிலும் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து சிவசங்கர்பாபா நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.  சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட 18 முன்னாள் மாணவிகள் சிபிசிஐடி போலீசாரிடம் இதுவரை பாலியல் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி, சிபிசிஐடி போலீசார் பாலியல் தொந்தரவுக்கு அளாகிய மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர். மாணவிகளின் வாக்குமூலத்தின் படி சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  அந்த வகையில், சுசில் ஹரி பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவரின் தங்கையையும் அவர், ஆசீர்வாதம் செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து கடந்த 11ம் தேதி பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் படி சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் 2வது வழக்காக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.அதேநேரம், சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் அளித்த புகாரின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாணவியை சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். அதைதொடர்ந்து சிவசங்கர் பாபாவை 3வது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 சிபிசிஐடி போலீசார் இதுவரை பதிவு செய்துள்ள 2 வழக்குகளிலும், சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை அழைத்து வந்து விட்ட சுசில் ஹரி பள்ளியில் வேலை செய்து வரும் 5 ஆசிரியைகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் 5 ஆசிரியைகளும் சிபிசிஐடி போலீசார் கைதில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்து வருகின்றனர். இருந்தாலும் சிபிசிஐடி போலீசார் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் படி 5 ஆசிரியைகளுக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். அந்த சம்மனை தொடர்ந்து நேற்று முன்தினம் 3 ஆசிரியைகள் சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகினர். அவர்களிடம் 6 மணி நேரத்திற்கு மேல் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை 3 ஆசிரியைகளும் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணையின் போது 3 ஆசிரியைகள் அளித்த வாக்குமூலம் குறித்து சிபிசிஐடி போலீசார் கூறியதாவது:

சுசில் ஹரி பள்ளியில் 10 ஆண்டுகளாக 3 ஆசிரியைகளும் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் ஊதியத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இதனால் பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா சொல்வதை அவர்கள் கேட்கவில்லை என்றால் அவர்களை வேலையில் இருந்து நீக்கி விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. இதனால் சிவசங்கர் பாபா சொல்படி அவர்கள் நடந்து வந்தள்ளனர். சிவசங்கர்பாபா சொல்வதை தவறாமல் கேட்பதால் சிவசங்கர் பாபாவின் நம்பிக்கைக்குரிய ஆசிரியைகளாக  இருந்து வந்துள்ளனர். சிவசங்கர் பாபா உத்தரவுப்படி அவர்கள் கட்டாயம் வாரத்தில் தலா 2 மாணவிகளிடம் பேசி சிவசங்கர் பாபா ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி அழைத்து வர வேண்டும். அதுதான் அவர்களின் முக்கிய பணி.

அதன்படி தான் ஆசிரியைகள் பள்ளி மாணவிகளிடம் சிவசங்கர் பாபாவின் ஆசீர்வாதம் கிடைத்தால் பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி மாணவிகளை சிவசங்கர் பாபாவின் ரகசிய அறைக்கு அழைத்து வந்துள்ளனர். சிவசங்கர் பாபாவின் ஆசைகளை ஆசிரியைகள் பூர்த்தி செய்வதால் அவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் ரூ.40 ஆயிரத்திற்கு மேல் மாத ஊதியம் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் 3 ஆசிரியைகளும் 100க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்து வந்து சிவசங்கர் பாபாவின் ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர். சிவசங்கர் பாபா எப்போது வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா ெசன்றாலும் உடன் நம்பிக்கைக்குரிய ஆசிரியைகள் மற்றும் மாணவிகளை அழைத்து சென்று வந்துள்ளார். இவ்வாறு 3 ஆசிரியைகளும் வாக்குமூலம் அளித்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

சிவசங்கர் பாபா சொல்வதை அவர்கள் கேட்கவில்லை என்றால் அவர்களை வேலையில் இருந்து நீக்கி விடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்து வந்துள்ளது.

Related Stories: