தனியார் மருத்துவமனையில் அனுமதி அதிமுக அவை தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்: வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நலம் தேறினார். அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியலில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து அவர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்தார். இதற்கிடையில் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது.

இதையடுத்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் பரிசோதனை செய்ததில் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் 24 மணி நேரமும் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்  தகவல் தெரிவித்தனர்.

Related Stories: