வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு பாஜ பிரமுகர் தலைமறைவு

பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியில் 39 வயது பெண் தனது கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசிக்கிறார். இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வருபவர் பார்த்தசாரதி(55). இவர் பாஜ பெரம்பூர் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவர். கடந்த 2018ம் ஆண்டு இவர் அடிக்கடி பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக கூறி அப்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார்.  

அதன் பின்பு மீண்டும் தற்போது அந்த பெண் மற்றும் அவரது 15 வயது மகளுக்கு அடிக்கடி பார்த்தசாரதி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வருவதாக அந்த பெண் சமீபத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் அந்த மனு புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு அனுப்பப்பட்டு கொடுங்கையூர் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

அதில் பார்த்தசாரதி அடிக்கடி பெண் மற்றும் 15 வயது மகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வருகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த பார்த்தசாரதி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: