பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கீழக்கணவாய், மங்கலம் ஆகிய 2 கோயில்களில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் 70 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கணவாய் கிராமத்தில் சாலையை ஒட்டி அரச மரத்தடியில் பத்ம காளியம்மன் கோவில் உள்ளது. நேற்றுமுன்தினம் பூஜை முடிந்த பிறகு கோவில் பூசாரியான அபிமன்னன் (45) நேற்று காலை கோயிலைத் திறக்க வந்துள்ளார்.அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளிருந்த உண்டியலை காணவில்லை. தகவலறிந்து அங்கு கூடிய பொதுமக்கள் சுற்றுப்பகுதிகளில் தேடியபோது, கோவிலுக்குப் பின்னால் உள்ள ஏரியில் கருவேல முட்புதர்கள் அருகே கிடந்தது தெரிந்தது.