நீட் தேர்வு வேண்டாம் என பெரும்பாலானோர் எங்களிடம் கருத்து தெரிவித்தனர்.: ஆய்வறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கிய பின் ஏ.கே.ராஜன் பேட்டி

சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என பெரும்பாலானோர் எங்களிடம் கருத்து தெரிவித்தனர் என்று நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்த பின் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசால் கடந்த 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

பின்தங்கிய, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதில், நீட் தேர்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. அதன்படி 9 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதங்களாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களை பெற்றனர்.

அதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் பலகட்டமாக ஆலோசனை மேற்கொண்டு ஆய்வறிக்கையை ஒன்றை தயாரித்தனர். அந்த ஆய்வறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர். ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த பின்னர் செய்தியாளர்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

அப்போது அவர் தெரிவித்தது, நீட் தேர்வு வேண்டாம் என பெரும்பாலானோர் எங்களிடம் கருத்து தெரிவித்தனர். நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது பற்றி 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளேன். எங்களது தனிப்பட்ட கருத்துக்களை ஆய்வு அறிக்கையில் முன்வைக்கவில்லை; ஆய்வு திருப்தியாக இருந்தது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர் கருத்து தெரிவித்தனர். இது வாக்கெடுப்பு அல்ல, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: