ஆஸ்திரேலியாவுடன் கல்வி பரிமாற்றம் உயர் கல்வித்துறையில் 83 ஒப்பந்தங்கள் கையெழுத்து: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை:  தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு பல்கலைக் கழகங்கள் இணைந்து உயர்கல்வியில் பரிமாற்றம் செய்துகொள்ள 83 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அத்துடன், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகள் உடனான சந்திப்பும் நடந்தது. அந்த சந்திப்பில் கல்வி பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு நாட்டு கல்வி அமைச்சர்களும் கையெழுத்திட்டனர். அதற்கு பிறகு  அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:

தமிழக முதல்வரின் ஆணைப்படி உயர்கல்வித்துறை வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலிய தூதகர அதிகாரிகளுடன் கல்வி தொடர்பான தகவல்கள் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் தமிழக பல்கலைக்கழங்களின் கல்வி பரிமாற்றங்களுக்காக 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மேலும் பல பல்கலைக்கழகங்களை உருவாக்கவும் கோரியுள்ளோம். உயர்கல்வித்துறை வளர்ச்சிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு வெற்றிகரமான சந்திப்பாக  இருந்தது. கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான  பணிகள் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும். தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் முடிவுகள் எடுத்து அறிவிப்பார்.  இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: