சென்னை: தமிழறிஞர் சத்தியசீலன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: பேராசிரியர் சத்தியசீலன் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் என்ற இலக்கிய வடிவத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றவர்களில் ஒருவர். கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகவும், முதல்வராகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள அவர், கல்வித்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். ஏராளமான இலக்கிய நூல்களை எழுதியவர், முற்போக்கான கருத்தோட்டங்களை கொண்டவர். சிறந்த இலக்கிய ஆய்வாளரும் தமிழறிஞருமான அவரது மறைவு, இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.