மயிலாப்பூர் தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை மூன்று ஆசிரியர்கள் மீது புகார்: மகளிர் போலீசார் விசாரணை

சென்னை: மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மூன்று  ஆசிரியர்களிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த பள்ளியின் முன்னாள்  மாணவிகள் இணைந்து எழுதிய புகார் கடிதம் சமூக வலைதளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அந்த பள்ளியின் காரத்தே மாஸ்டர் கெபிராஜ் என்பவர்  பயிற்சியின் போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்  அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து  அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள், ஆசிரியர்களால் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் மேலும் ஒரு  பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவி ஒருவர் புகார்  அளித்துள்ளார்.

மயிலாப்பூரை சேர்ந்த அந்த இளம்பெண் கடந்த 2004ம் ஆண்டு  முதல் 2014ம் ஆண்டு வரை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில்  உள்ள பி.எஸ்.சீனியர் செகன்டரி பள்ளியில் படித்துள்ளார். அப்போது அந்த பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்த சிவகுமார், வெங்கட்ராமன், ஞானசேகரன் ஆகிய மூன்றும் பேரும்  தன்னிடம் வகுப்பறையில் பல முறை தவறாக நடந்து கொண்டதாக பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் அந்த மாணவி புகார்  அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மயிலாப்பூர் அனைத்து  மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் 3  ஆசிரியர்களும் எத்தனை ஆண்டுகளாக இந்த பள்ளியில் வேலை செய்து வருகின்றனர்,  இவர்கள் மீது மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்களா, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளியில்  கண்காணிப்புக்குழு உள்ளதா, அந்த குழுக்கள் முறையாக செயல்படுகிறதா, மற்ற  மாணவிகளுடன் இது போன்று ஆசிரியர்கள் தவறாக நடந்துள்ளனரா, என்ற கோணங்களில் விசாரணை நடத்த முடிவு  செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: