சென்னை: மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மூன்று ஆசிரியர்களிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் இணைந்து எழுதிய புகார் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அந்த பள்ளியின் காரத்தே மாஸ்டர் கெபிராஜ் என்பவர் பயிற்சியின் போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள், ஆசிரியர்களால் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் மேலும் ஒரு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.