மரம் வெட்டுவதை கண்காணிக்க மாநில பசுமைக்குழு நியமனம்; அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் மரம் வெட்டுவதை ஒழுங்குபடுத்துவதற்கும், பொது இடங்களில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில பசுமைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: பொது நிலங்கள், பொது இடங்கள், அலுவலகங்களில் மரங்களை பாதுகாக்க மாவட்ட பசுமைக்குழுக்களுக்கு கொள்கை ஆதரவை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை செயலாளரை தலைவராக கொண்டு 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தொழில் துறை செயலாளர், நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர், நகராட்சி மற்றும் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், சுற்றுலா மற்றும் இந்து அறநிலையத்துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், நெடுஞ்சாலை துறை செயலாளர் மற்றும் டிஜிபி, வனத்துறை தலைமை அதிகாரி உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

அதேபோன்று, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு 6 பேர் கொண்ட குழுக்கள் மாவட்ட வாரியாக அமைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், பொது நிலங்களிலும், பொது இடங்களிலும் நிற்கும்,விழுந்த மரங்களை வெட்ட,அகற்ற,அகற்றுவதற்காக மாவட்ட பசுமைக்குழுக்களுக்கு கொள்கை ஆதரவையும் வழங்கும். அதேபோன்று, தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் மரங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட குழுக்களுக்கு கொள்கையை வழங்குதல். மரம் நடவு செய்வதற்கான வருடாந்திர திட்டத்தை தயாரிக்கும் பணிகளையும் இந்த குழு மேற்கொள்ளும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: