அரசு வேலை வாங்கி தருகிறேன்!: ஓ.பி.எஸ். பெயரை பயன்படுத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த நெல்லை அதிமுக பெண் நிர்வாகி..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை பயன்படுத்தி நெல்லை மாவட்ட அதிமுக பெண் நிர்வாகி அந்த கட்சியை சேர்ந்தவரிடமே 30 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. அரசுக் கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி திண்டிவனத்தை சேர்ந்த அய்யப்பன் என்ற அதிமுக நிர்வாகியிடம் நெல்லை தெற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர் சௌர்ணா 30 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கூறிய சௌர்ணா, உறுதி அளித்தபடி வேலை வாங்கி தராததுடன் பணத்தையும் திருப்பி தர மறுத்துள்ளார்.

இதையடுத்து மோசடி பற்றி ஓ.பன்னீர்செல்வத்திடமே அய்யப்பன் தொலைபேசியில் புகார் கூறியுள்ளார். தனது பெயரை பயன்படுத்தி மோசடி நடந்ததை அறிந்த பிறகும் போலீசில் புகார் அளிப்பது உங்கள் விருப்பம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகியின் மோசடி பற்றி புகார் அளித்த கட்சியை சேர்ந்த கவுன்சிலரிடமே ஓ.பி.எஸ். அலட்சியமாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: