பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தனி ஆளாக போராட்டம் பெட்ரோல் போட துட்டு இல்ல... அய்யா...சாமி... பிச்சை போடுங்க: காங்கிரஸ் பெண் நிர்வாகி வீடியோ வைரல்

நாகர்கோவில்: ‘‘அய்யா... சாமி... பெட்ரோல் போட துட்டு இல்ல... யாராவது பிச்சை போடுங்கய்யா’’ என்று கேட்டு குமரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் நிர்வாகி பெட்ரோல் பங்க் முன்பு தனி நபராக அமர்ந்து போராட்டம் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ கடந்துவிட்டது. இதை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நாகர்கோவில், சுங்கான்கடை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் சனா, நாகர்கோவில் - களியக்காவிளை சாலையோரம் கள்ளியங்காடு பகுதியில் பெட்ரோல் பங்க் முன்பு அமர்ந்து காலி கேன் மற்றும் தட்டு, மண் பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியவாறும், ஒரு கையில் காங்கிரஸ் கொடியை ஏந்திய வண்ணமும் தனி ஆளாக அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, ‘‘அய்யா சாமி பெட்ரோல் போட துட்டு இல்ல... யாராவது பிச்ச போடுங்கய்யா...’’ என்று கேட்டு அவர் பிச்சை எடுக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை மலையாள நடிகர் சூரஜ் வெஞ்ஞாறமூடு பெட்ரோல் டீசல் விலை உயர்வு போராட்ட படக்காட்சி ஒன்றில் பேசிய மலையாள வசனங்களை இணைத்தும் வெளியிட்டுள்ளனர்.

Related Stories: