15 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்தது: மனைவியை பிரிந்தார் நடிகர் ஆமிர்கான்

சென்னை: பாலிவுட் நடிகர் ஆமிர்கான், தனது மனைவி கிரண் ராவை பிரிந்துவிட்டார். விரைவில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார். ஆமிர்கான் தனது முதல் மனைவியை பிரிந்த பிறகு, கிரண் ராவ் என்பவரை காதலித்து மணந்தார். லகான் இந்தி படத்தில் ஆமிர்கான் நடித்தபோது, அதில் இணை இயக்குனராக பணியாற்றியவர் கிரண் ராவ். அப்போது அவர்கள் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலானது. கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் திருமண பந்தத்தில் இருந்தனர்.

இவர்களுக்கு ஆஸாத் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘நாங்கள் சந்தோஷமாக பிரிந்துவிட முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு இத்தனை ஆண்டுகள் உறுதுணையாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. மகன் ஆஸாத்துக்காக நல்ல பெற்றோராக நாங்கள் இருப்போம். திரைப்படம் மற்றும் மேலும் சில பணிகளை நாங்கள் சேர்ந்து மேற்கொண்டோம். அவற்றில் தொடர்ந்து இணைந்து பணிபுரிவோம்.

இப்போது தனித்தனி வழியை தேர்வு செய்துள்ளோம். இது முடிவல்ல. எங்களது புதிய வாழ்க்கையின் தொடக்கம்’ என தெரிவித்துள்ளனர். விவாகரத்து கோரி விரைவில் நீதிமன்றத்தில் ஆமிர்கான் மனு தாக்கல் செய்வார் என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: