விநாயகர் சிலை, அகல்விளக்கு, மண்பாண்டங்கள் செய்ய இலவசமாக களிமண் எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்: சேம.நாராயணன் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம் தலைவர் சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த ஆட்சியில் ஏரி, குளங்களை ஆழப்படுத்துவதற்காக மராமத்து பணி என்று அறிவித்து பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஏரி, குளங்கள் சரிவர தூர்வாரவில்லை அதனால் மழைநீர் சேமிக்க முடியவில்லை. ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. பருவமழை இன்னும் 2, 3 மாதங்களில் தொடங்க இருக்கிறது. ஏரி, குளங்களை ஆழப்படுத்த வேண்டும்.

அதன்மூலம் கிடைக்கும் வண்டல் மண் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் கடந்த 2 வருடங்களாக கொரோனா நோய் தொற்றால் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி, அதனை தொடர்ந்து கார்த்திகை தீபம், பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. இந்த 3 பண்டிகைக்கும் முக்கியமாக தேவைப்படுவது விநாயகர் சிலை, அகல்விளக்கு, மண்பானைகள்தான்.

முதல்வர், ஏரி குளங்களை ஆழப்படுத்த உத்தரவிட்டு, அதன்மூலம் கிடைக்கும் வண்டல் மண், களிமண் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக எடுத்து கொள்ள உத்தரவிட வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை ஓரளவுக்கு சரிசெய்து கொள்வோம். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: