கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் தெற்கு ராஜன் வாய்க்காலில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் மிகவும் முக்கியமான பாசன வாய்க்காலாக தெற்கு ராஜன் வாய்க்கால் இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் இருந்து நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று கொள்ளிடம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி செய்து தருகிறது. இந்த வாய்க்காலில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு இரண்டு கரையை ஒட்டி கான்கிரீட் தடுப்புசுவர் அமைத்து தரைப் பகுதியிலும் கான்கிரீட் சிமென்ட் தளம் அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்படி இரண்டு புறங்களிலும் கான்கிரீட் சுவர் கட்டப்படுவதால் கரையை ஒட்டி வரும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மற்றும் சிறுவர்கள் மழைக்காலத்தில் தவறி விழுந்து விட்டால் அவர்கள் மீண்டும் கரையை அடைவது அரிதான ஒன்றாகிவிடும்.