சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால், பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்பூசி போட வந்த மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 தடுப்பூசி மையங்கள் மற்றும் 19 நகர்ப்புற சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தற்போது தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.