திண்டுக்கல்: தமிழகத்திலேயே முதல்கட்டமாக திண்டுக்கல்லில் ரூபாய் 20 கோடி செலவில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு 1000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளதாக மாநில சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, கூவனூத்து ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று அவர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள இலங்கை வாழ் தமிழர்களிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஸ்தான், முகாம்களில் இலங்கை வாழ் தமிழர்கள் விடுத்த கோரிக்கையை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.