சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ்.பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார். எஸ்.பீட்டர் அல்போன்ஸ், கடந்த 1989 மற்றும் 1991ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் தென்காசி தொகுதியிலிருந்தும், கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். முதல்வரின் நல்லெண்ண தூதுவராக எனது பணியை நிறைவேற்றுவேன்: சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பீட்டர் அல்போன்ஸ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் நிருபர்களிடம் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது: சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக எனக்கு பொறுப்பினை தந்திருக்கின்ற தமிழக முதலமைச்சருக்கு என்னுடைய நன்றியினை காணிக்கையாக்கி கொள்கிறேன். தமிழகத்தில் இருக்கின்ற சிறுபான்மையினர் நலனை, அவர்களுடைய தேவைகளை, உரிமைகளை பாதுகாக்கின்ற இந்த ஆணையத்தின் பொறுப்பினை வழங்கி இருக்கிறார்கள்.  சிறுபான்மை மக்களுக்கும் கலைஞர் அவர்களுக்கும் எவ்வளவு நெருக்கம் இருந்ததோ, அதற்கு சற்றும் குறையாமல் இன்று முதலமைச்சராக இருக்கும் முதல்வரும் சிறுபான்மை மக்கள் மீது கரிசனமும், பற்றும், கவனமும் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories: