சுஷில்ஹரி பள்ளியில் சிவசங்கர் பாபாவிடம் 1 மணி நேரம் விசாரணை.: 8 நாட்கள் காவல் கேட்டிருந்த நிலையில், 3 நாட்கள் மட்டுமே அனுமதி

சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை சுஷில்ஹரி பள்ளிக்கு அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் பெயரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவரை, 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் 3 நாட்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை அழைத்து சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

முன்னதாக சிவசங்கர் பாபா சுஷில்ஹரி பள்ளி வளாகத்துக்கு அழைத்து வருவதை அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் சாலையோரம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: