நீட் ஆய்வு குழுவுக்கு எதிரான வழக்கு, மாநில சுயாட்சி மீது பாஜக நடத்திய தாக்குதல்!: கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம்..!!

சென்னை: நீட் தேர்வு குறித்து பாஜக வழக்கு தொடர்ந்திருப்பது மாநில சுயாட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்று ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். 

இந்த குழு தன்னுடைய ஆய்வை மேற்கொண்டு வருகிறது. தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக வழக்கு தொடர்ந்தது மாநில சுயாட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஜனநாயக ரீதியாக குழு அமைத்த தமிழக அரசின் நடவடிக்கை மீது என்ன தவறை கண்டார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு பயம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். மத்தியில் பாஜக அரசு இருப்பதால் மாநில அரசுகளின் முடிவுகளை தமிழக பாஜக எதிர்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக அரசு குழு அமைத்து ஆராய்வதை கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லையா என்றும் ஒன்றிய அரசு தமிழக பாஜகவை வைத்து மாநில சுயாட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை நிலைநிறுத்த பார்க்கிறதா என்றும் சந்தேகம் எழுவதாகவும் ஈஸ்வரன் சாடியுள்ளார். 

Related Stories: