உத்திரமேரூர் அரசு மருத்துவமனையை அமைச்சர் ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேன்ற ஆய்வு செய்தார். உத்திரமேரூர் பஜார் வீதியில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுமார் 66 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த அரசு பொது மருத்துவமனையில் போதிய கட்டிட வசதி இன்றி நோயாளிகளும் பொதுமக்களும் தவித்து வந்தனர். இந்நிலையில் புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையின் பேரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தேர்தல் அறிக்கையில் உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டிடம் அமைத்து தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.

 அதனடிப்படையில் நேற்று உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்துவமனை கட்டிடங்கள், படுக்கைகள்,  அறுவை சிகிச்சை அறைகள், விடுதிகள் என அனைத்து இடங்களையும் பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது காஞ்சி மாவட்ட கலெக்டர்  ஆர்த்தி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ,  எம்பி செல்வம், நிர்வாகிகள் ஞானசேகரன், பாரிவள்ளல், ஏழுமலை, கோபாலகிருஷ்ணன், சசிகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: