தண்டையார்பேட்டை: கலைஞர் பிறந்த நாளையொட்டி கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ராயபுரம் பழைய வண்ணாரப்பேட்டை சிமிட்ரி சாலையில் உள்ள ராபின்சன் பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 30 பத்திரிகையாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஏற்பாட்டில் ராயபுரம், ஆர்கே நகர், திருவொற்றியூர், பெரம்பூர், திருவிக நகர், கொளத்தூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வாகனங்களில் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வாகனங்களை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.