அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துகுவிப்பு புகார் குறித்த வழக்கில் 3வது நீதிபதி நியமனம்..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துகுவிப்பு புகார் குறித்த வழக்கில் 3வது நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மகேந்திரன் என்பவரின் மனுவை விசாரித்த 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் 3வது நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

அதில் அமைச்சராக இருந்த போது ராஜேந்திரபாலாஜி குறிப்பிட்ட சொத்துக்களை கணக்கு காட்டி அதிகளவில் சொத்து சேர்த்ததாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற அப்போதைய நீதிபதிகளாக இருந்த சத்யநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி சத்யநாராயணன் இந்த வழக்கு தொடர்பாக தனி அதிகாரி ஒருவரை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார்.

அந்த விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. அதாவது ஒரு நீதிபதி புகாரில் முகாந்திரம் இல்லை என்றும் மற்றொரு நீதிபதி முகாந்திரம் இருப்பதாகவும் தீர்ப்பளித்தனர்.

இவ்வாறு மாறுபட்ட தீர்ப்பாக வழங்கப்பட்டதினால் 3வது நீதிபதியை நியமிக்க வழக்கின் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3வது நீதிபதியாக நீதிபதி நிர்மல்குமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து, நீதிபதி நிர்மல்குமார் முன்பு இந்த வழக்கின் விசாரணை என்பது நடைபெறும். அதன்பிறகு அடுத்தகட்ட விசாரணையை லஞ்சஒழிப்புத்துறை தொடங்கும்.

Related Stories: