ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி: நடிகை நிவேதா பெத்துராஜ் புகார்

சென்னை: சென்னையிலுள்ள ஒரு உணவகம் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ள புகார் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், நிவேதா பெத்துராஜ். தமிழகத்தை சேர்ந்த அவர், தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.  அதில், தனி செயலி மூலம் சென்னையில் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும்,  பார்சல் வந்தவுடன் அதைப் பிரித்து சாப்பிட முயன்றபோது, அதில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்த நிலையில் இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து நிவேதா பெத்துராஜ் கூறுகையில், ‘ஆன்லைன் உணவு நிறுவனம் மற்றும் இதர உணவகங்கள் தற்போது எப்படிப்பட்ட தரத்தை பின்பற்றுகின்றன என்று தெரியவில்லை. இதுவரை 2 முறை நான் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சியை கண்டுபிடித்துள்ளேன். இதுபோன்ற உணவகங்களில் தினந்தோறும் அதிரடி சோதனை நடத்தி, உணவு தரமாக இல்லை என்றால் அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். இந்தியா முழுவதும் இந்நிறுவனம் உணவு டெலிவரி செய்து வரும் நிலையில், தங்களது செயலியில் தரமான உணவகங்களை இணைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட உணவகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: