சென்னை: சென்னையிலுள்ள ஒரு உணவகம் மீது நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ள புகார் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், நிவேதா பெத்துராஜ். தமிழகத்தை சேர்ந்த அவர், தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதில், தனி செயலி மூலம் சென்னையில் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், பார்சல் வந்தவுடன் அதைப் பிரித்து சாப்பிட முயன்றபோது, அதில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்த நிலையில் இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.