திருவில்லிபுத்தூரில் அலட்சிய அதிமுகவால் அலங்கோலமான உழவர் சந்தை-தமிழக அரசு அறிவிப்பால் உயிர்பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூரில் உள்ள உழவர் சந்தை அதிமுகவின் அலட்சிய ஆட்சியால் பராமரிப்பின்றக புதர்மண்டி கிடப்பதால், இரவு நேரங்களில் பாம்பு, எலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு உழவர் சந்தைகளுக்கு உயிர் கொடுக்கப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.

திருவில்லிபுத்தூரில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு உழவர் சந்தை திறக்கப்பட்டது விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உழவர் சந்தைகளை கண்டுகொள்ளாமல் விட்டதால், அங்கு செயல்பாடு மிக குறைவாக உள்ளது. அந்த வகையில் திருவில்லிபுத்தூர் உழவர் சந்தையும் பெயரளவில் செயல்படுகிறது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, திருவில்லிபுத்தூர் உழவர் சந்தையைப் பொறுத்தவரை சுமார் 55 விவசாயிகளுக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. 48 கடைகள் இங்கு இருந்தது. ஆனால் தற்போது மிகக் குறைந்த அளவில் விவசாயிகள் விற்பனை செய்ய வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகால அதிமுக அலட்சிய ஆட்சியில் உழவர் சந்தையை கண்டுகொள்ளாமல் விட்டதால், அலங்கோலமாகி இடிந்து விழக் கூடிய நிலையில் உள்ளது. சுற்றுச் சுவர்கள் முழுவதம் இடிந்து உள்ளன. உழவர் சந்தை உட்பகுதியில் புதர் மண்டிக் கிடப்பதாலும், ஆட்கள் நடமாட்டம் இல்லாததாலும், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக தமிழக அரசு உழவர் சந்தைகளுக்கு உயிர் கொடுக்கப்படும் என அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது, என்றார்.

Related Stories: