பெரம்பூர்: சென்னை பாரிமுனை பகுதியில் வசித்து வந்தவர் நடேசன் (77). இவரது மனைவி மீனா. தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். நடேசன் கடந்த 2003ம் ஆண்டு புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது, இவரது மூத்த மகன் ராஜன் மலேசியாவிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்டாக செயல்பட்டு வந்துள்ளார். அவர் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் சிலர் புகார் கொடுத்ததாகவும், அதன்பேரில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து போலீசார் நடேசன் வீட்டிற்கு வந்து விசாரித்துள்ளனர். அப்போது, நடேசன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட போலீசார் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பெரம்பலூர் மாவட்ட போலீசார், ராஜன் வழக்கில் நடேசன் மீதும் சேர்த்து வழக்கு பதிந்துள்ளனர். இதனால், 30.6.2003 அன்று ஓய்வு பெற இருந்த நடேசன், 28.6.2003 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கு தொடர்பாக 36 பேரிடம் விசாரிக்கப்பட்டு, நடேசன் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டது.