சென்னை: சென்னையில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்தில் உள்ள 5,574 சட்டவிரோத கட்டுமானங்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வக்கீல் ருக்மாங்கதன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ராயபுரம் மண்டலத்தை போல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியதுடன், 5வது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் வழங்கி இருந்தனர்.