உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிக்க கூடாது: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   மாநில உயர் நீதிமன்றங்களின் செயல்பாடு, உரிமை மற்றும் அதிகார ஆள்வரை ஆகியவற்றை பறிக்கும் வகையிலான ஒரு செயல் திட்டத்தை, உச்ச நீதிமன்ற பதிவு பெற்ற வழக்கறிஞர் சங்கமும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும் இணைந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளித்துள்ளது. அதில், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களை மாநில உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 217க்கு எதிரானது. ஒரு மாநில நீதிமன்றத்தின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியாகவே அமையும்.

ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் தொழில் புரியாத ஒரு வழக்கறிஞரை, மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது. அவ்வாறு முயற்சிப்பது, உயர் நீதிமன்றங்களின் அதிகாரத்தைப் பறிக்கின்ற முயற்சியே ஆகும். இத்தகைய முயற்சி, மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களின் வாய்ப்புகளை தட்டி பறிப்பதாகும்.இந்தி பேசாத மாநிலங்களில், இந்திக்காரர்களைக் கொண்டு வந்து அதிகாரத்தில் உட்கார வைக்க முயற்சிப்பதும் ஒரு இந்தித் திணிப்பே ஆகும். இது தமிழக நலனுக்கு எதிராக அமையும். இத்தகைய கோரிக்கையை, உச்ச நீதிமன்றமோ, ஒன்றிய அரசோ ஏற்றுக் கொள்ளக் கூடாது.

Related Stories: