அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலை தலைவராக தமிழர் ராஜகோபால் ஈச்சம்பாடி நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி: அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையானதும், உலகப் புகழ்பெற்றதுமான இலினொய் தொழில்நுட்ப பல்கலை தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி என்பதால், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமின்றி இந்திய துணைக் கண்டத்திற்கே உலகளாவிய பெருமையை அவர் பெற்று தந்திருக்கிறார். 53 வயதாகும் ராஜகோபால் ஈச்சம்பாடி திருவாரூரில் பிறந்து, சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் மேல்படிப்பையும் பயின்றவர்.

வரும் ஆகஸ்ட் 16 அன்று இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ராஜகோபால் ஈச்சம்பாடி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலை கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்திருப்பது, பிறந்த மண் மீது அவர் கொண்டுள்ள பற்றுதலின் வெளிப்பாட்டை காட்டுகிறது. தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்திற்குச் சான்றாக விளங்கும் ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேமதுரத் தமிழர் புகழ் திக்கெட்டும் பரவட்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: