தஞ்சை: டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தாண்டு காவிரி தண்ணீர் மூலம் 3.10 லட்சம் ஏக்கரிலும், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2.42 லட்சம் ஏக்கரிலும் மொத்தம் 5.52லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறுவை சாகுபடிக்காக கடந்த 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். தற்போது மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் நேற்றுமுன்தினம் அதிகாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்தது. அங்கிருந்து 9,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் இரவில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது. நேற்று காலை நிலவரப்படி கல்லணைக்கு வினாடிக்கு 7,500 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது.