இந்தியன்-2 பட விவகார வழக்கு மேல் முறையீடு விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இந்தியன்-2 பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக லைகா நிறுவனத்துக்கு எதிராக இயக்குனர் சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படம்  தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.  இந்த வழக்கில் சங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தனி நீதிபதி மறுத்து விட்டார். இதை எதிர்த்து லைகா நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

 அப்போது சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, ஐதராபாத் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கை தள்ளிவைக்க லைகா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள தடை கோரிய மனு மீது தீர்வு கண்ட பின், மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி இந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: