அத்திமாஞ்சேரிப்பேட்டை அருகே ஏரி பாசன கால்வாய் மூடல்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு  அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டையில் உள்ள ஏரி நீர் மூலம்   500க்கும்  மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெற்று வருகின்றது. கொதகுப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், அத்திமாஞ்சேரிப்பேட்டை ஏரியில் இருந்து நடுகால்வாய் மூலமாக பெறப்படும் தண்ணீர் மூலம் பயிர் சாகுபடி செய்துவந்தனர். இந்தநிலையில் கொத்தகுப்பம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவன் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து தங்களது விவசாய நிலத்துக்கு அருகில் செல்லும் இரண்டு ஏரி பாசன கால்வாயை சில மாதத்துக்கு முன்பு ஆக்கிரமித்ததுடன் மணல் கொண்டு மூடிவிட்டதாக தெரிகிறது.

இதுபற்றி கேட்ட விவசாயிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் பாசன வசதி இன்றி கடந்த 3 மாதங்களாக பயிர் செய்யமுடியாமல் கொதகுப்பம் பகுதி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.‘ஏரிப்  பாசன கால்வாய் ஆக்கிரமித்து  புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கொதகுப்பம் கிராமத்துக்கு தண்ணீர் செல்வதற்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவேண்டும்’ என்று கிராமத்தினர் கூறினர்.

Related Stories: