மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ரூ.3850.45 கோடி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

ஊட்டி : மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2021-22ம் ஆண்டிற்கு ரூ.3850.45 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார். மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு ரூ.3850.45 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டிற்கு ரூ.3850.45 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. அதேபோல், மகளிர் குழுக்களுக்கு பல்வேறு கடன்களும், பல்வேறு வணிக ரீதியான கடன்களும் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் வங்கிகள் கடன் இலக்கு நிர்ணயம் செய்வது வழக்கம். இதற்காக நடப்பு ஆண்டிற்கான கடன் திட்டம் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் துறை சார்ந்த விவரங்கள் அடங்கி உள்ளது. மாவட்ட முன்னோடி வங்கி மூலம் இந்த ஆண்டிற்கு ரூ.3850.45 கோடி கடன் திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.375.45 கோடி அதிகம். கடந்த ஆண்டை காட்டிலும் 10.80 சதவிகிதம் அதிகமாக இம்முறை கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த தொழில் துவங்க ரூ.2722.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேம்பாட்டிற்கு ரூ.485.10 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.642.85 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் தகுதியுடையவர்களுக்கு கடன் உதவிகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் பாபு, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சண்முக சிவா, தாட்கோ மாவட்ட மேலாளர் ரவிசந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் மோகனகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: