சென்னை: தமிழக முதல்வர் கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில் அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைக்க 250 கோடி ஒதுக்கி ஆணைப் பிறப்பித்துள்ளார். இவ்வாணைக்கிணங்க நேற்று கிண்டி, கிங் இன்ஸ்ட்டியூட் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை கட்டுவதற்கு இடம் தேர்வு குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் கடந்த வாரம் வரலாற்று சிறப்புமிக்க கிண்டி, கிங் நோய் தடுப்பு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ₹250 கோடி செலவில் அமைப்பதற்கு திட்டமிட்டு அறிவித்தார். தென்சென்னை பகுதியில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இம்மருத்துவமனை விரைவில் அமைய இருக்கிறது.