ஊரடங்கு பாதுகாப்பு பணியின் போது கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட காவலர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த உதயநிதி ஸ்டாலின்: திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் நடவடிக்கை

சென்னை: ஊரடங்கு பாதுகாப்பு பணியின்போது கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்ட காவலரை அரசு மருத்துவமனையில் சேர்த்து உயர்தர சிகிச்சைக்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக புஷ்பராஜ்(45) பணியாற்றி வருகிறார். திருவள்ளூர் மாவட்ட காவலர் குடியிருப்பில் தனது மனைவி எழிலரசி மற்றும் ஒரு வயது மகன் ஜெயசந்திரனுடன் வசித்து வருகிறார். இவர் முழு ஊரடங்கின் போது திருவாலங்காடு சந்திப்பில் பணியாற்றி வந்தார். பணியின் போது புஷ்பராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் தலைமை காவலர் புஷ்பராஜூக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருப்பதை உறுதிப்படுத்தினர். அதை கேட்டு தலைமை காவலர் மற்றும் அவரது மனைவி எழிலரசி, குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

தலைமை காவலர் புஷ்பராஜூக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருக்கும் செய்தி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த அடுத்த நிமிடமே காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமை காவலரை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார். அவரது நிலைமையை உணர்ந்த கண்காணிப்பாளர் உடனே தலைமை காவலரை மீட்டு சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மருத்துவர்கள் உடனே கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு ரூ.20 லட்சம் செலவாகும் என்றனர். ஏழை குடும்பத்தை சேர்ந்த தலைமை காவலர் புஷ்பராஜ் அவ்வளவு பணத்தை சொத்தை விற்றால் கூட ஏற்பாடு ெசய்ய முடியாத நிலையில் தவிர்த்தார். இந்த தகவல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. உடனே தலைமை காவலரின் நிலைமையை கருத்தில் கொண்டு கருப்பு பூஞ்சைக்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.

முதல் கட்டமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், மருத்துவர்கள் ஆலோசனைப்படி ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை சிறப்பு சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டார்.

 இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட தலைமை காவலர் புஷ்பராஜை நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் தலைமை காவலரிடம்  ‘நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களுக்கான அனைத்து  செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். விரைவில் நீங்கள் குணமடைந்த மீண்டும் பணிக்கு திரும்புவீர்கள்’ என்று கூறினார். அதை கேட்ட தலைமை காவலர் மனம் நெகிழ்ந்தார். அப்போது தலைமை காவலருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். உதயநிதி ஸ்டாலினின் மனித நேயத்தை காவல் துறையில் பணியாற்றி வரும் போலீசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Related Stories: