புதுடெல்லி: கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு கோவாக்சின் தடுப்பூசியை காட்டிலும் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இரண்டு தடுப்பூசிகளுமே கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் என்பதால் எந்த தடுப்பூசி கிடைத்தாலும் போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இரண்டு தடுப்பூசிகள் சிறந்தது எது என்ற சந்தேகம் பலருக்கு எழுந்திருப்பது இயல்பான ஒன்று தான். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே நல்ல பலனை தருவதாகவும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் கோவிஷீல்டு போட்டுக்கொண்டவர்களில் ஸ்பைக் எதிர்ப்பு ஆன்டிபாடி கணிசமாக அதிகரித்து இருந்தது.
நாட்டில் 13 மாநிலங்களில் 22 நகரங்களில் 305 ஆண்கள் மற்றும் 210 பெண்கள் என மொத்தம் 515 சுகாதார ஊழியர்களிடம் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 425 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள். 90 பேர் கோவாக்சின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள். இவர்களின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. ரத்த மாதிரியில் ஆன்டிபாடிகள் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை காட்டிலும் கோவிஷீல்டு ஒரு டோஸ் எடுத்தவர்களின் உடலில் 10 மடங்கு அதிக ஆன்டிபாடிகள் உருவாவது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்படாதவர்களில் இரண்டு தடுப்பூசியும் போட்டுக்கொண்டவர்களில் 97.8 பேருக்கு ஆன்டிபாடிகள் அதிக அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேபோல் கோவாக்சின் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 79.3 சதவீதம் பேருக்கு ஆன்டிபாடிகள் அளவு அதிகரித்திருந்தது.