சென்னை: ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றுக்கு பலியானார். ஓவல் ஓவியத்தை புகைப்படத்தை விட அசத்தலாக வரைந்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்துவார் தத்ரூப ஓவியர் இளையராஜா. கொரோனா தொற்று காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளில் மரணமடைந்தார். இவருக்கு வயது 43. இவர் கும்பகோணம் வட்டம் செம்பியவரம்பல் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். 2003ல் நடைபெற்ற முதல் ஓவியக் கண்காட்சியில் மிகுந்த கவனம் பெற்றார். 2009ம் ஆண்டு ‘‘திராவிடப் பெண்கள் கண்காட்சி” என்ற பெயரில் அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் காலரியில் கண்காட்சி நடந்தது. இதில் இளையராஜாவின் ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டன. மு.க.ஸ்டாலின் இரங்கல்:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜாவின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்.