சென்னை : சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெறும் தூய்மை பணியை நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் கோயம்பேடு மார்கெட் வளாகத்தை சுத்தம் செய்யும் பணி இனிமேல் தொடர்ந்து நடைபெறும். ஆனால், மார்கெட்டை ஞாயிற்றுகிழமை முழு நாளும் மூடினால் காய்கறி, பழங்களின் விலை உயரும் அபாயம் இருப்பதை கருத்தில், கொண்டு அன்று மதியம் 12 மணி வரை மட்டும் இயங்கும். அதன் பிறகு 12 மணி முதல் இரவு 8 மணி வரை சிஎம்டிஏ ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்போது தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது வரை 6,340 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அடுத்த 10 நாட்களில் அனைத்து வியாபாரிகளும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.