கோயம்பேடு வணிக வளாகத்தில் 10 நாட்களில் வியாபாரிகள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் எச்சரிக்கை

சென்னை : சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெறும் தூய்மை பணியை நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும்  கோயம்பேடு மார்கெட் வளாகத்தை சுத்தம் செய்யும் பணி இனிமேல் தொடர்ந்து நடைபெறும். ஆனால், மார்கெட்டை ஞாயிற்றுகிழமை முழு நாளும்  மூடினால் காய்கறி, பழங்களின் விலை உயரும் அபாயம் இருப்பதை கருத்தில், கொண்டு அன்று மதியம் 12 மணி வரை மட்டும் இயங்கும். அதன் பிறகு 12 மணி முதல் இரவு 8 மணி வரை சிஎம்டிஏ ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்போது தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது வரை 6,340 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அடுத்த 10 நாட்களில் அனைத்து வியாபாரிகளும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

அதன்பிறகு தடுப்பூசி செலுத்தாத நபர்கள் கோயம்பேடு வணிக வளாகத்தில் அனுமதிக்கப்பட மாட்டர்கள். மே மாதத்தில் மட்டும் 16 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த மாதத்தில் மட்டும் கொரோனா தடுப்பூசி தற்போது வரை 2,500 நபர்களுக்கு போடப்பட்ட நிலையில் 2 நபர்களுக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.இந்த ஆய்வின்போது  கோயம்பேடு நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், விருகம்பக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா உடன் இருந்தனர்.

Related Stories: