சென்னை: தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காத கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில்களில் ஒன்று வடபழனி முருகன் கோயில். இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பக்தர்கள் வசதிக்காக மணமக்கள் உடைமாற்று அறை, தங்கும் அறைகள் விரைவில் கட்டப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாத கோயில்களை கணக்கெடுத்து, அதை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆகம விதிகளின்படி பழமை மாறாமல் கோயில் புனரமைக்கப்படும்.