மீனம்பாக்கம்: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வென்டிலேட்டர்கள், 25 டிராலியுடன் கூடிய வென்டிலேட்டர்கள் சென்னை வந்தன. மேலும் 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஜெர்மனியில் இருந்து 4 சரக்கு விமானத்தில் வந்தன. கொரோனா வைரஸ் 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பயனாக கடந்த சில நாட்களாக தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. நோயாளிகளுக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அரசு பெருமளவு வரவழைத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானம் நேற்று மாலை சென்னை பழைய விமான நிலையம் வந்தது.