உப்பளம் துறைமுக சாலையில் மீன் வியாபாரம்-திருவிழாபோல கூடும் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம்

புதுச்சேரி: உப்பளம் அம்பேத்கர் சாலை மீன் சந்தையில் வியாபாரிகளும்,  பொதுமக்களும் சமூக இடைவெளியை  மீறி வருவதால் கொரோனா  தொற்று அபாயம் நிலவுவதாக காவல்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.மேற்கு வங்கம், வங்க தேசம் இடையே ைமயம் கொண்டிருந்த யாஸ் புயல் கரையை கடந்தது. தமிழகம், புதுவையில் 2 நாட்கள் மழை எச்சரிக்கை  விடுக்கப்பட்டிருந்தது. புயல் எச்சரிக்கை கூண்டு 2ம் எண் ஏற்றப்பட்டிருந்த  நிலையில் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு  செல்லாமல் இருந்தனர். இதனிடையே  நேற்று முதல் கட்டுமர மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு திரும்பியுள்ளனர்.  நேற்று காலை   கும்பலாக தேங்காய்திட்டு துறைமுகம், கடற்கரை  பகுதிகளில் இருந்து அவர்கள் கடலுக்கு சென்றனர்.

புதுச்சேரியில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள், சமூக இடைவெளி மீறலில்  ஈடுபடுவதாக போலீசுக்கு புகார்கள் குவிகிறது. உப்பளம்,  அம்பேத்கர் சிலை அருகே மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு துறைமுகம்  செல்லும் பாதையில் வியாபாரம் செய்ய நகராட்சி அனுமதித்துள்ளது.

 அங்கு  சமூக இடைவெளியின்றி மீனவ பெண்கள் அருகருகே அமர்ந்து மீன் வியாபாரம்  செய்கின்றனர். அங்கு மீன்களை வாங்குவதற்கும் பொதுமக்கள்  முண்டியடிக்கின்றனர். அவர்களை தினமும்  கட்டுப்படுத்த ஒரு ஏட்டு, 2 காவலர்,  ஒரு மகளிர் காவலர் அங்கு பணியில் ஈடுபட்டு அபராதம்  வசூலித்தும்  ரூ.100ஐ கட்டிவிட்டு துணிச்சலாக வியாபாரம் செய்வதாக போலீசாரே  வேதனை தெரிவிக்கின்றனர்.

மீன் வாங்க வந்தவர்கள், சாலைகளில் இரு சக்கர வாகனங்களை கண்ட இடத்தில் விட்டு, மீன் வாங்குவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.எனவே  நகராட்சி சார்பில் அங்கு சமூக இடைவெளிவிட்டு குறியீடுகள் வரைந்து கடைகளை  நடத்த அனுமதிக்க வேண்டுமென பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வலுத்துள்ளது. இல்லாவிடில் கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Related Stories: