சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் 30 மதுபாட்டில்கள் சிக்கியது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில் நிலையத்துக்குள் நீண்ட நேரமாக, பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதைக்கண்ட போலீசார் அந்த பையை திறந்து பார்த்தனர். அப்போது அந்த பையில், 30 மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறிது நேரம் அந்த பகுதியில் போலீசார் நின்று கொண்டு, பையை எடுக்க யாராவது வருகிறார்களா என பார்த்துகொண்டிருந்தனர். ஆனால் கடைசி வரை யாரும் வரவில்லை. இதையடுத்து, அந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த பாட்டிலை யார் கொண்டு வந்தார், எப்படி இங்கு வந்தது என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு தீவிரமடைந்திருப்பதை கண்டவர்கள், அந்த பையை அப்படியே போட்டு  ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், நேற்று முன்தினம் ஆந்திர வாலிபர் ஒருவர் இடுப்பில் 28 லட்சத்தை துணியால் சுற்றி மறைத்து கொண்டு வந்து, கடைசியில் போலீசிடம் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து, நேற்று 30 மதுபான பாட்டில்கள் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: