பணியில் சேர்ந்த ஆண்டிலிருந்து வழங்க வேண்டும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு நியமன ஒப்புதல்: கல்லூரி கல்வி இயக்குநருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவன உதவி பேராசிரியர்கள் உள்பட நான்கு பேருக்கு அவர்கள் நியமிக்கப்பட்ட ஆண்டில் இருந்து நியமன ஒப்புதல் வழங்க கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி கல்லூரியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு முறையே, புனித கலாமேரி, லதா மற்றும் ஜான்சன் பிரேம்குமார், குளோரி டார்லிங் மார்கரெட் ஆகியோரை கல்லூரி நிர்வாகம் 2000ம் ஆண்டு நியமித்தது.இவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் கோரி கல்லூரி நிர்வாகம், கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பித்த போது நான்கு பேருக்கும் 2007ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக ஒப்புதல் அளித்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை ரத்து செய்து பணியில் சேர்ந்த 2000ம் ஆண்டு முதல் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி, நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளுக்கு  கல்லூரி கல்வி இயக்குனரகம் பதிலளித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ‘ கல்லூரி தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து 4 பேரும், பணி ஓய்வு மற்றும் பதவி உயர்வால் காலியான இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. எனவே, 2007ல் பணி நியமனம் செய்ததாக அளித்த ஒப்புதல் ரத்து செய்யப்படுகிறது. இவர்கள் நான்கு பேரும் பணியில் நியமிக்கப்பட்ட ஆண்டில் இருந்து அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி அது தொடர்பான நிலுவை சம்பள தொகையை ஆறு வாரங்களில் கல்லூரி கல்வி இயக்குநரகம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Related Stories: