திருவொற்றியூர் அரசு பள்ளியில் கஞ்சா தகராறில் வாலிபர் கொலை?.. 2 பேரிடம் விசாரணை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை ஒரு வாலிபர் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா தகராறினால் வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என 2 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை திருவொற்றியூர், மணலி பாடசாலை தெருவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். தற்போது  ஊரடங்கு என்பதால் பள்ளி மூடப்பட்டு, இங்குள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்பள்ளி வளாகத்தில் நேற்று மாலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தலை, கை, கால், முதுகு போன்ற இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் மணலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அந்த வாலிபர் மணலி, அன்பழகன் தெருவை சேர்ந்த சாக்ரடீஸ் (26) எனத் தெரியவந்தது. மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் சாக்ரடீசுடன் மேலும் சிலர் கஞ்சா போதையில் தகராறு செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காமிராவில் தெளிவாக பதிவான உருவங்களை வைத்து 2 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், மூடிக் கிடக்கும் அரசு பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கஞ்சா அடிப்பதற்காக வந்திருக்கலாம். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் சாக்ரடீசை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மணலி போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: