அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பனைமரத்தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் போன்று பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ₹5 ஆயிரம் உதவி தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால் நோய் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது என்று வரும் செய்திகள் சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால் ஊரடங்கை நீட்டித்தால் தான் சாத்தியமாகும் என்று தமிழக அரசு தற்பொழுது மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அறிவித்து இருக்கிறது. தளர்வில்லா முழு ஊரடங்கில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகையை வழங்கியுள்ளது.

அதேபோல் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் மற்றும் ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகன பழுது நீக்குவோர்கள் நடைபாதை வியாபாரிகள், சமையல் கலைஞர்கள், நரிக்குறவர்கள், சலவை தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், சிறிய கோயில் பூசாரிகள், திருநங்கைகள் போன்றோர்களுக்கு ரூபாய் 5,000 அரசு உதவித் தொகையாக வழங்கவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: