சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பனைமரத்தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் போன்று பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ₹5 ஆயிரம் உதவி தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால் நோய் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது என்று வரும் செய்திகள் சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால் ஊரடங்கை நீட்டித்தால் தான் சாத்தியமாகும் என்று தமிழக அரசு தற்பொழுது மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அறிவித்து இருக்கிறது. தளர்வில்லா முழு ஊரடங்கில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகையை வழங்கியுள்ளது.